Wednesday, November 29, 2006

நல்லார் ஒருவர்-1 www.charactercounts.org

வள்ளுவன் வாக்கு:-
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

உண்மையோ பொய்யோ, ஒழுக்கத்திற்கும் அறநெறிக்கும் பெயர்
போன நாடு நம் தாயகம் என்று என்னால் அடிக்கடி சொல்லிக்
கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது
மாறிலி (constant) அல்ல, ஒப்புநோக்குதலின் அடிப்படையில் தான்!

சக மனிதர்களை மதிக்கத் தெரிவதும் அவர்களின் நல்லுணர்வை
புரிந்துகொள்ளுதலுமே இன்றைய உலகின் பேரொழுக்கங்களாகும்.
வாழ்வியல் ஒழுக்கநெறிக்கு (ETHICS) சம காலத்தில் வாழ்பவர்களில்
பலரை நாம் எடுத்துக்காட்டாய் காட்டலாம், நம் நாட்டில் மட்டுமல்ல,
பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலுள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும்
கூட எடுத்துக் காட்டலாம். அதில் பள்ளி மாணவர்களுக்கு
ஒழுக்கநெறி கற்றுக் கொடுப்பதையே தன் முழு முதல் கடமையாக
வைத்திருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் லாஸ்ஏஞ்சலஸ் நகரைச்
சேர்ந்த "மைக்கேல் ஜோசப்சன்" (Micheal Josephson) என்பவர்
இன்றைய வழிகாட்டிகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை
நிச்சயம் பிடிப்பார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தனது முழு நேர தொழிலாக
ஒழுக்கத்தை மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும்
கற்றுக் கொடுக்கிறார் திருவாளர் ஜோசப்சன் அவர்கள்.
ஜோசப்சன் ஒழுக்கநெறி நிறுவனம் (Josephson Institute for Ethics)
என்ற இலாபம்-சாரா (non-profit) நிறுவனத்தை இவர் நடத்தி
வருகிறார். பிள்ளைகள் வளரும் பருவத்திலே அவர்களுக்கு
ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து, நல்ல குடிமகன்களாய் மாற்ற
வழிகாட்டும் இந்த பெருஞ் செயல், உலகத்தை ஒரே நாளில்
மாற்றியமைக்காது என்றாலும், நாளைய சமுதாயத்தை ஒரு
நல்லதொரு சமுதாயமாக உருவாக்குவதற்கான ஒரு நல்ல
செயல் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இவரின் நிறுவனம்
இன மற்றும் மத சார்பு இல்லாத ஒரு நிலையில்தான் ஒழுக்கத்தை
கற்றுக் கொடுக்கின்றது.

அவரின் வலைத்தளம் :- http://www.charactercounts.org/

கீழ்வரும் ஆறு அடிப்படை கொள்கைகளைத்தான் அவர்
மாணவர்களுக்கு முக்கியமாகக் கற்றுக் கொடுக்கிறார்.
1) நம்பிக்கைக்கு உரியவராய் இருத்தல் (Trustworthiness)
2) பிறரிடத்தில் மரியாதை (Respect)
3) பொறுப்புணர்ச்சி (Responsibility)
4) கண்ணியமாய் இருத்தல் (Fairness)
5) பிறரிடத்தில் கனிவு (Caring)
6) நல்ல குடிமகனாய் இருத்தல் (Citizenship)
ஆறு கொள்கைகள்:- http://www.charactercounts.org/defsix.htm

இது தவிர Work Ethics (வேலையிட ஒழுக்கம்) குறித்தும் வகுப்புகளை
நடத்துகிறார். தினம் ஒரு முறை உள்ளூர் வானொலியில் பல்வேறு
தலைப்புகள் குறித்தும் பேசுகிறார்.
இந்த சுட்டியில் நுழைக :- http://www.charactercounts.org/knxtoc.htm

பணம் சம்பாதிக்க பல நூறு வழிகளிருந்தும், அதையெல்லாம்
விடுத்து, நாளைய சமூகத்திற்கு வழிகாட்டியாக, நமக்கெல்லாம்
ஒரு முன்னுதாரணமாய் இருக்கும் மைக்கேல் ஜோசப்சன்
அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

தொடர்புடைய வலைத் தளங்கள்:-
முக்கிய வலைப்பக்கம் :- http://www.charactercounts.org/
ஆறு கொள்கைகள் :- http://www.charactercounts.org/defsix.htm
வானொலி பேச்சு :- http://www.charactercounts.org/knxtoc.htm

அன்புடன்,
நம்பி.பா.


பிகு. இந்த பதிப்பு வைகறைவானத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ளது.

Friday, November 17, 2006

செய்து முடித்தவன்

ஒரு நாட்டு மக்களின் பொருளாதாரம் எப்படி உயரும் ?

எந்த ஒரு நாடு தனது அடிப்படை தேவைகளை உள் நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்தி செய்து அதே உற்பத்தியின் மூலம் அன்னிய செலாவனியை ஈட்டுகிறதோ அந்த நாடே பொருளாதார பலம் பெற்றதாக திகழும்.

சரி ஒரு கிராமத்தின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்த முடியும்?

ஒரு நாட்டுக்கு என்ன வழிமுறைகளோ அதேதான் ஒரு கிரமத்துக்கும். நாடும் கிராமமும் அளவுகளில் தான் வேறு, ஆனால் அடிப்படை பொருளாதார தத்துவங்கள் இரண்டுக்குமே ஒன்றுதான்.


இந்த பொருளாதார அடிப்படை தத்துவத்தை சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில், திருவள்ளுவர் போகும் வழியில் இருக்கும் குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார் அதன் தலைவர் இளங்கோ.



அண்ணா பல்கலைகழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்த பின் "ஆயில் இந்தியாவில்" தனக்கு கிடைத்த பணியை உதறிவிட்டு மக்கள் பணியற்ற வந்தவர் இவர்.

இனி ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையில் இருந்து.

கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சதும் ஆயில் இந்தியா கம்பெனி'யில வேலை கிடைச்சுது. ஓரிஸ்ஸாவில் இருந்தேன். என் கிராத்தை அப்படியே விட்டுட்டு நான் மட்டும் வேறெங்கேயோ போய் சந்தோஷமா வாழ மனசு ஒப்பலீங்க. வசதி வாய்ப்பு இருகிறவன்கூட இப்படி ஊரைவிட்டு வெளியேற்ட்டா. அப்புறம் மனுஷ்ங்களைக் காப்பாத்தறதுதான் யாருனு ஒரு குற்ற உணர்ச்சி.

ஏற்கெனவே நான் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தைக் கரைச்சுக் குடிச்சிருந்தேன். கிராமப் பஞ்சாயத்துங்கறது மத்திய-மாநில அரசுகளுக்கு உட்படாத 'சுய அரசங்கம்'னு சட்டம் தெளிவா சொல்லுது. ஊர் திரும்பி வந்தேன். எல்லார்கிட்டயும் பேசினேன். தேர்தல்ல நின்னேன். என்மேல நம்பிக்கை வெச்சு ஊர்மக்கள் என்னை ஜெயிக்க வெச்சாங்க. அதை நான் எனக்கான வெற்றியா நினைக்கலை. 'முடிஞ்சா இந்த ஊரை மாத்திக் காட்டுறா!னு மக்கள் விட்ட சவாலத்தான் எடுத்துகிட்டேன்.

இதோ இவரது பொருளதார தத்துவம்..

வயிறு பசிக்கிறப்போ. வசதிகளைப் பற்றி யோசிக்க முடியாது. முதலில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர நானொரு சர்வே பண்ணினென். கிராமத்து மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். வேற யாருக்கோ போய்ச் சேருது. குத்தம்பாக்கத்தில் மட்டும் ஒரு மாசத்துக்கு அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வெளியிலிருந்து வாங்கறோம். சோப்பு, சீப்புல ஆரம்பிச்சு வயலுக்கான உரம் வரை எல்லாமே வெளியில் இருந்துதான் வருது. இதில் பெரும்பாலான் பொருள்களின் மூலம் இங்குதான் உற்பத்தியாகுது.

உதாரணத்துக்கு அரிசி. மக்கள் பாடுபட்டு விவசாயம் பண்ணி. நெல்லை விளைவிக்கறாங்க. அதை மொத்த விலைக்கு வெளியூர்ல விக்கறாங்க. அது எங்கெங்கோ சுத்தி கடைசியில அரிசியா திரும்பி வருது. அதைப் பல மடங்கு விலை கொடுத்து வாங்கறங்க. ஆக அவங்களோட பொருளும் போச்சு.. பணமும் போச்சு! அப்புறம் எப்படி வறுமை ஒழியும்?

மக்களோட பணம். பணக்காரர்களிடம் தேங்காம மக்களிடமே சுழலணும். அதுக்கு நான் ஒரு வழி செஞ்சேன். கிராமத்துக்குத் தேவையான எந்த வேலைக்கும் காண்ட்ராக்டர்களின் உதவியை நாடுவதில்லை என்று முடிவு செய்தேன். கட்டடம் கட்டுவது. ரோடு போடுவது என் எல்லா வேலைகளையும் ஊர் மக்களே எடுத்துச் செய்தோம்.

அவருடைய தத்துவத்தின் மூலம் அவர் செய்து முடித்த காரியங்கள்.


  1. ரூ88 லட்சத்தில் கட்ட திட்டமிடப்பட்ட வடிகால் கட்டும் பணி ரூ40 லட்சத்தில் கட்டிமுடித்தது
  2. கள்ளசாரயம் காய்ச்சுபவர்களிடம் ரோடு போடும் பணி ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் கிராமத்தில் கள்ளச்சாரயத்தை ஒழித்தது. (நல்ல வழியில் பணம் கிடைதால் யார் தான் தப்பு பணணுவாங்க?)
  3. உள்ளூர் கட்டட கட்டுமானத்திற்கான செங்கல் அவர்களின் சொந்தமண்ணிலே தாயார் ஆவது.
  4. 15 பேர் கொண்ட சணல் பைகளுக்கான டெய்லரிங் யூனிட்டும், மற்றும் அதன் உற்பத்தி பொருட்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவது.
  5. குறைந்த வாட்ஸ் தெருவிளக்குகள் தயாரிப்புக்கு ஒரு யூனிட்.
  6. எண்ணெய் உற்பத்தி யூனிட், சோப்பு தயாரிக்கும் ஒரு யூனிட்.
இவை எல்லவற்றுக்கும் மேலாக இவரது வாழ்க்கை குறிக்கோளாகக் கூறுவது
"செய் அல்லது செத்துமடி" என்பார்கள் நான் செய்துவிட்டே சாக விரும்புகிறேன்.

இதை கேட்கையில் உள்ளுக்குள் ஏதோ வேகம் பிறக்குது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

நன்றி :-
ஆனந்த விகடன் 07-11-2004 மற்றும் 15-11-2006 தேதியிட்ட இதழ்கள்.

கனவும் காட்சியும்!!!

வள்ளுவன் வாக்கு!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்;
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்

தாழாது உஞற்றுபவர்;

கனவும் காட்சியும்!!!

உணவு மட்டுமே இவர்களுக்கு உணவாய் இருக்கின்றது,
கனவுதான் உணவு என்பதே இவர்களுக்கு
தெரியவில்லையென்று! --(ஜேஜே சில குறிப்புகளிலிருந்து)
அதென்னவோ இன்றைக்கும் நிஜமாய்த்தான் இருக்கிறது.

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்! கனவுகள் தான்
நிஜத்தின் பாதை, கனவுகள் தானே நாளை என்பதையே
நம் கண்களுக்கு காட்டுகின்றன.

"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே
பல நேரங்களில் நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது!
மாற்றியும் வைக்கின்றது.

விடியலில் உறக்கத்தை வழியனுப்பும் கனவு
நம் மனதை நிறைக்கா நாளேது?

உறக்கத்தின் கனவுகளில் சில
உலகத்திற்கே வழி காட்டியிருக்கின்றன.
உறக்கத்திற்கு மட்டுமல்ல,
விழிப்புக்கும் கூடத்தான் கனவு சொந்தம்.

விழிப்பின் கனவு சிறப்பான கனவு,
சிந்தையின் உச்சத்தின் வந்த கனவு அது!
செயலின் உச்சத்தில் வரும் கனவும் அதுவே!

விழிப்பின் கனவு வேறெதுவுமில்லை,
முனைப்பின் கனவு அது,
தியானத்தின் கனவு அது,
போதியினடியில் புத்தன் கண்ட கனவு அது.

நாளையின் பாதையை நமக்கு மட்டுமல்ல
உலகுக்கே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது அது .

கனவை காட்சியாக்கும் முயற்சியில்தான்
உலகே இயங்கிக் கொண்டிருக்கின்றது,
மறுக்க முடியாத உண்மை இதுதானே!!

நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!

நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும்
அதற்கே விலையாய் இன்றே தருவோம்!!

நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை!

கனவு காணுவோம்! கனவு காணுவோம்!!

அன்புடன்,
நம்பி.பா.

பிகு. இந்த பதிவு http://vaigaraivaanam.blogspot.com பதிவிலும் பதியப்பட்டுள்ளது.

Saturday, November 11, 2006

இந்தியா ஓர் விவசாய நாடு!

இந்தியா ஓர் விவசாய நாடு! இந்தியர்களில் 80 விழுக்காடு விவசாயத்தையே பிரதாண தொழில்லாக கொண்டுள்ளனர் என்பது நாம் ஆனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்று விவசாயத்திற்கான முக்கியத்துவம் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகின்றது.


இயற்க்கை ஒரு பக்கம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றால்? 1970களுக்கு பின் விவசாய முன்னேற்றதில் கவனம் செலுத்தாத நம் அரசியல்வாதிகள் பண்ணாட்டு நிறுவனம் மற்றும் உலகமயமாக்கல் அலுத்தம் காரணமாகவும் இப்பொழுது விவசாயத்தை நேரடியாகவே வஞ்சிக்க ஆரமபித்து விட்டனர்.

ஊடகங்கள் விவசாயத்தை ஒரு தீண்டதகாத துறையாகவே கொண்டுள்ளனர். ஊடகங்களில் விவசாயத்தை பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்கள் 1 விழுக்காடு மட்டுமே.

இநத சூழ்நிலையில் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்ற ஆனந்த விகடன் மற்றும் ஜீனியர் விகடன் விவசாயிகளின் பிரச்சனைகளை பேசுவதற்காகவே ஒவ்வொரு பகுதியை ஒதுக்கி உள்ளது. விவசாய துறைகளில் உள்ள பிரச்சணைகளை மக்களுக்கும் மற்றும் அதன் சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கும் முக்கியப் பணியையும் செய்யத்துவங்கியுள்ளது.

இது மிகவும் வரவேற்க்கதக்க முயற்ச்சி!

Tuesday, November 07, 2006

லாரி + கோழி + முட்டை + 3 வருட உழைப்பு = ISO 14001

நாமக்கல் நகரம் எதற்கு எல்லாம் பெயர் போனது ?

1.நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை
2.நாமக்கல் மலைக் கோட்டை
3.லாரி
4. (கறி) கோழி
5. முட்டை
6. அனுமார் கோவில்

இவை அனைத்தும் பல ஆண்டுகளாக நாமக்கல் நகரத்திற்கு பெருமை சேர்த்த விசயங்கள். இடைப்பட்ட காலத்தில் இதே நகரம் மற்றும் ஒரு காரணத்திற்காக செய்திகளில் அடிபட்டது, அது அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நகரம் என்பதற்காக.

ஆனால் அந்த இடர்பாட்டை தாண்டி அதே நகரம் நம் தமிழர்கள்(இந்தியர்களையும்) அனைவரையும் பெருமை படுத்தும் விதத்தில் சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறது. அது இந்தியாவின் முதல் ISO 14001 தரசான்றிதல் பெற்ற நகரமாக இன்று திகழ்கிறது.

ISO 14001 தரசான்று என்பது தூய்மை, சுற்றுபுறசூழல் மற்றும் சிறந்த மேலாண்மை கொண்ட நகரத்திற்கு வழங்கப்படும் தரசான்றிதல்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்