Thursday, January 18, 2007

மாட்டுச் சாணத்திலிருந்து மின்சாரம்!

மாட்டுச் சாணத்திலிருந்து மின்சாரம்!

அமெரிக்க வெர்மாண்ட் மாநிலத்தின் பொது மின் உற்பத்தி

நிறுமத்திலிருந்து -CVPS(Central Vermont Public Service)
அறியப்பெறும் ஒரு பாடம்!

வேண்டாமென்று மாடுகள் கழிக்கும் சாணத்திலிருந்து

"சாண எரி வாயு" (Cobar gas) தமிழகத்தில் ஊரெங்கும் தயாரித்ததை
எண்பதுகளில் பார்த்திருக்கிறேன். அது பெரிய இயக்கமாகவே
அரசாங்கத்தால் நடத்தப்பட்டதென்று நினைக்கிறேன், மேலதிக
தகவல்கள் என்னிடம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகள்
வைத்திருந்தவர்களின் வீடுகளில் கூட அரசு உதவியுடன்
"சாண எரி வாயு" கலன்கள் பதித்து, அடுப்புகளை விறகுகளிலிருந்தும், மண்ணெண்ணையிலிருந்தும் விடுவிக்குமுகமாகவும்,
மாட்டுச் சாணக் கழிவினை பயன்படுத்துமுகமாகவும்
அந்த முயற்சி இருந்தது. பயன்பாட்டுக் காரணமாகவோ,
சூழ்நிலைப் பாதுகாப்புக் காரணமாகவோ அந்த முயற்சி
தோல்வியைத் தழுவியது.

வெர்மாண்ட் மாநிலம் முழுமைக்கும், மாட்டுப் பண்ணைகளுக்கு

பெயர் போனது. வெர்மாண்டின் இலையுதிர்காலத்து மர இலைகளின்
நிறமாற்றமும், குளிர்காலத்தின் பனிமலைகளில் நடைபெறும்
பனிச்சறுக்கும் கொணரும் பயணிகள் தான் பெரு வருமானமாக
இருந்தாலும், பண்ணைகளுக்கு முக்கிய வருமானத்தில்
பெரும்பங்கு உள்ளது.

இணையத்தில் படித்த தகவலில், வெர்மாண்ட்டில் மாட்டுச்

சாணத்திலிருந்து வெற்றிகரமாக மின்சாரம் தயாரித்து மக்களுக்கு
அளிப்பது சாத்தியமென்பது, நாளை நமது ஊரிலும் நடக்க வாய்ப்பு
இருப்பதெனக் காட்டுகிறது. பண்ணைகளில் வீணாக்கப்படும்
மாட்டுச் சாணம், அதிக மீத்தேன் வாயுவை விடுவிக்கும்,
இந்த மீத்தேன் வாயு, கரியமில வாயுவைவிட சூழலுக்கு
பெருங்கேடு தரும்.இவர்கள் மாட்டுச்சாணத்தை, பெரிய மூடிய
காற்றுப்புகா உலையிலிட்டுப் பின், சாணத்திலிருந்து வரும்
மீத்தேன் வாயுவை எரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்.
எரிப்பதனால் வரும் கரியமில வாயு மீத்தேனை விட சூழலுக்கு
குறைவான தீங்கு செய்வதால், இது ஏற்புடையதாக இருக்கிறதென
தெரிவிக்கின்றனர்.

பண்ணைகளில் மின்சாரம் தயாரிக்கும் உலை நிறுவுவதற்கு

பெருஞ்செலவு ஆகுமென்றாலும், CVPS-ன் பங்களிப்பாலும்,
மின்சாரத்தை விற்பதால் வரும் வருமானத்தாலும் அதை
சரிக்கட்ட முடியுமென்று தெரிவிக்கின்றனர். இதுவரை
2500 CVPS பயனர்கள் இந்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

சில சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இந்தியாவில் மாட்டுச்

சாணத்திலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயுவால்
சுற்றுப்புற சூழலுக்கு பெருங்கேடென குற்றம்சாட்டி வருவது
நினைவுக்கு வருகிறது. இதுபோல் மாட்டுச் சாணத்திலிருந்து
மின்சாரம் தயாரித்து, மீத்தேன் உமிழ்வை குறைக்கும்
முயற்சி அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமென
எண்ணுகிறேன்.

நடைமுறைப்படுத்துவதில் சிக்கலாக இருக்கக் கூடியவை
1) மின் உலை நிறுவதில் ஆகும் பெருஞ்செலவு
2) நிறுவுவதற்கான தொழில்நுட்பம் அறிதலும்
3) வெர்மாண்ட் பண்ணைகளில், சில நூறு மாடுகளாவது இருக்கும்,
எண்ணிப்பார்க்கையில் கூட்டுறவாய் செய்தால்தான் நம் ஊருக்கு

இது ஒத்துவருமோ என்ற கேள்வி எழுகிறது.

பின் குறிப்பு:-

இந்த பதிவை எழுதி முடித்துப் பதிவதற்குமுன்,
மேலதிக தகவலுக்காக இது குறித்து கூகுள் செய்ததில்,
தஞ்சாவூர் சக்கரபள்ளி ஊராட்சியில், மகளிர் சுய உதவிக் குழுவினர்
அரசு உதவியுடன் 7.9 கோடி செலவில் மிகப்பெரிய முயற்சியை
முன்னெடுத்து சென்று கொண்டிருப்பது குறித்து தெரிந்துகொள்ள

முடிகிறது. மாட்டுச்சாணம் மட்டுமல்லாமல், மனிதக் கழிவுகளையும்
இங்கே பயன்படுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் முமுமைக்கான,
பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இது நடப்பது
அறிய வந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி!
ஊர் கூடி தேர் இழுக்கிறார்கள்!
இதற்கான தொடுப்பு:-
http://www.hindu.com/2005/04/07/stories/2005040704950300.htm








3 comments:

✪சிந்தாநதி said...

மாட்டுச் சாணம் மற்றும் மனிதக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சிறு அமைப்புகளை ராஜேந்திரன் என்ற இளைஞர் தனிநபராகவே பெருமளவில் பலருக்கும் அமைத்துக் கொடுத்திருப்பதாக சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக் கட்டுரையில் படித்தேன். தனிவீடுகளுக்கும் தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றிலும் இவரது அமைப்பு பல இடங்களில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல் படுகிறதாம். கழிவின் அளவைப் பொறுத்து குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் அமைக்கிறாராம்.

நம்பி.பா. said...

சிந்தாநதியாரே,
வருகைக்கும், திரு.ராஜேந்திரன் அவர்கள் பற்றி அறியத் தந்தமைக்கும் நன்றி. மேலதிக தகவல்கள் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்.

இது போன்ற மாற்றுச் சக்தி உற்பத்தி பெருகுதல், வருங்காலத்தில், எண்ணெய் மற்றும் அணுசக்தி ஆகியவற்றின் மீதான சார்பை குறைக்க உதவுமென்று எண்ணுகிறேன்.

வெற்றி said...

அட உண்மையாகவா?

இத் திட்டம் வெற்றி பெற்றால் இதை ஈழத்திலும் உடனடியாகச் செயற்படுத்திவிட வேண்டியதுதான். :-))